36. அப்பாவின் கரைகள்

முத்திரக் கரைகளின் சூழலில்
பேரானந்தம் பொலிந்துகொண்டிருக்கும் ரகசியங்களை
சமுத்திரமில்லா ஊரில் குடியிருந்தபோது புரிந்துகொண்டேன்.

*

கடல் தன் வரலாறு கூறல் என்று
கரும்பலகையில் எழுதிய தமிழ் வாத்தியார்
எத்தனைபேர் கடலைப் பார்திருக்கிறீர்கள்? – என்றதற்கு
என் கரம் மட்டுமே உயர்ந்தது.
மற்றவர்கள் என்னைக் கடல்போல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

*

அவர்களைக் காட்டிலும்
அது எனக்குத்தான் செய்தியாய் இருந்தது.

*

இப்படித் திடீரென்று பொங்கிவிட்ட வாஞ்சையோடு
இப்பாதுதான் நான் அறிந்துகொள்ள நேர்ந்த அற்புதங்களை
நான் ஏற்கனவே அறிந்த சமுத்திரத்தில் பார்க்கும்பொருட்டு
அப்பாவோடு நான் ரயிலேறினேன்.

*

அப்பாவும் நானும் கரம்கோர்த்துக்கொண்டு
சிற்றலைகளின் தூரம் வரைக்கும்
அலைகளைப் போலவே அலைந்துகொண்டிருந்தோம்.

*

பேரலைகளைத் தொட்டுப்பார்க்கும் என் ஆவலை
அப்பாவிடம் வெளியிட்டபோது எனக்கு அது புரிந்தது:
‘அப்பா என் கரத்தைப் பிடித்திருக்கவில்லை,
நான்தான் அப்பாவின் கரத்தைப் பிடித்திருந்தேன்.’

*

இப்போது
அப்பாவும் நானும்
சமுத்திரக்கரையில் உட்கார்ந்திருந்தோம்.
தொடுவானத்திலிருந்த கண்களை அகற்றாமல்,
சமுத்திர நீரைப் பருக முடியாது என்று
யார் சொன்னது? – என்று கேட்டேன்.
அப்பா எழுந்துகொண்டு, போலாமா? – என்றார்.

Leave a comment